ஏரோப்ளேன் செல்கையில் இப்போதும்
கால்கள் துறு துறுக்கும்
ஓடிச் சென்று பார்க்க..
சூயிங்கம் சாப்பிடுகையில்
அனிச்சையாய் நாவில் எழும் முட்டை
வயதறிந்ததும்
வாயினுள்ளே அடங்கிப்போய்விடும்...
வீதியில் கட்டங்கள் வரைந்து சிறுவர்கள்
விளையாடுகையில்..
மனமும் கூடவே தெத்திக்கொண்டு
பின்னோக்கிச் செல்லும்!!!!
டிசம்பர் வெள்ளம் வீதியில் பாய்கையில்
சகோதரி மகளுக்குக் கப்பல் விட்டுக் காட்டுவதாய்ச்
சொல்லி
தண்ணீரில் இறங்கி ஆடை நனைத்து
காகிதக் கப்பல் விடுவது...
அவளுக்கு விளையாட்டுக் காட்டவா
எனக்கா என்று விளங்கவில்லை...?
மதியம் சாப்பிட்டு வீட்டினர்
கண்ணயரும் சமயம் பார்த்து
இடியின்றி மின்னலின்றி
சோவெனப் பெருமழையொன்று
அழகாய்ப் பெய்யும்..
மழையில் குளித்து வளவெல்லாம்
சுற்றித் திரிவதுவும்
மழை விட்டதும் மரத்தை
உலுக்கிச் சிலிர்ப்பதுவும்..
உம்மா கண்ணில் பட்டால்
"காச்சல் வரும்டீ" என
ஏச்சுக் கேட்பதுவும்
பெரிசாகியும் போகவேயில்லையே-இந்த
சிறுபிள்ளைத்தனம்
என்று நினைக்கையில்...
சீரியஸாய்க் கதைத்துக்கொண்டே
நிலத்தில் கிடந்த
ஷொப்பிங் பேக் ஒன்றை ஊதி
கைகளுக்கிடையே வைத்து
உடைக்கும் என்-உம்மாவில்
என்னைக் காண்கிறேன்..!!!